திருகோணமலை கிளிவெட்டி பிரதே சத்திலுள்ள பாரதிபுரத்தில் நேற்று (28-03-2009) இரவு 09 மணியளவில் ஊர்காவல் படையினரால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐந்து பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய கந்தையா யோகன் என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவராவார். கடந்த சில தினங்களாக ஊர்காவல் படையினர் இவரை அச்சுறுத்தி வந்ததாகவும் சம்பவ தினத்தன்று 10ற்கும் மேற்பட்ட ஊர்காவல் படையினர் ஒரு குழுவாக வந்து இவரது வீட்டை உடைந்து உள்ளே சென்று இவரை சுட்டுக்கொன்றதாகவும் தெரியவருகின்றது. இச்சம்பவம் நடைபெற்றவேளையில் இவரது வீட்டிலிருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் பொலிஸாரின் வாகனம் தரித்து நின்றதாகவும், சம்பவம் நடைபெற்று சில நிமிடத்தில் அங்கு பொலிஸார் வந்து இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கிளிவெட்டி தங்கநகர் பகுதியிலும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நடைபெற்றுள்ளது. இச்சூட்டு சம்பவத்திற்கும் சிறிலங்கா ஊர்காவல் படையினரே காரணமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 52 வயதுடைய செல்லத்துரை நல்லதம்பி என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவராவார். அண்மைய நாட்களாக திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் ஊர்காவல் படையினர் பொது மக்களை அச்சுறுத்தி வரும் செயல்களும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.



0 comments:
Post a Comment