தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » அலம்பில் கடற்பரப்பில் கடும் சமர்!

அலம்பில் கடற்பரப்பில் கடும் சமர்!

Written By paadumeen on Saturday, April 4, 2009 | 10:49 AM

கடற்படையினருக்கும் கடற்புலிகளுக் கும் இடையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்பரப்பில் நேற்று இரவு (03.04.2009) கடும் சமர் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இன்று சனிக்கிழமை காலை செய்தி வெளியிட்டுள்ள போதிலும் விடுதலைப் புலிகளிடம் இருந்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. வடகிழக்குக் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படைப்பரிவு நேற்று இரவு 11:30 நிமிடமளவில் அப்பகுதியால் சென்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் சில படகுகளை இடைமறித்த போதே கடலில் சமர் தொடங்கியதாக பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் பத்து படகுகளில் வந்ததாகவும், அதில் மூன்று தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்குரிய படகுகள் எனவும் ஏனைய ஏழும் தாக்குதல் படகுகள் எனவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் படகுகள் புதுமத்தாளன் பகுதியில் இருந்தே வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படகுகள் தென்பகுதியை நோக்கிய நகர்வை மேற்கொண்டிருந்த போது அவற்றின் மீது தாக்குதலை நடத்திய கடற்படையினர் அவற்றில் ஒன்றை முற்றாகவே அழித்ததாகவும், மற்றொன்றை செயலிழக்கச் செய்ததாகவும் விடுதலைப் புலிகளின் ஏனைய இரண்டு படகுகள் கடற்கரைப் பகுதியை நோக்கிச் சென்றபோது தரைப்படையின் தாக்குலால் அழிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தச் சமரின் போது கடற்படைப் படகுளில் ஒன்று சிறிய சேதத்துக்குள்ளாகியதாகவும், கடற்படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கடற்சமரில் கடற்படையினரின் இரண்டு டோராக்களாவது தாக்குதலில் அழிக்கப்பட்டிருக்கலாமென்றும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கலாமென்றும் உறுதிப்படுத்தப்படாத தகவலொன்று தெரிவிக்கின்றது. எனினும் இக் கடற்சமர் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உத்தியோகமான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment